288. புண்யாபுண்ய பலப்ரதா ( पुण्यापुण्यफलप्रदा – புண்யம், புண்யமில்லாதது இவற்றின் பலனைக் கொடுப்பவள் )
மேலே கூறிய வர்ணாஶ்ரம தருமங்களை நிருமித்தப் பிறகு, அவைகளைப் பின்பற்றுதல், அவ்வாறில்லாமை என்பவற்றின் புண்ணிய, பாவங்களை அம்மையே தருவதாகக் கூறும் நாமமிது. புண்ணியத்தின் பலன் சுவர்கம்; நரகம் பாவத்தின் பலன். சித்பவானந்தர் உரை இவற்றை எடுத்துக்காட்டுக்களுடன் அழகாக விளக்குகிறது. இராவணனும், அவனைச் சார்ந்தவர்களும், விபீஷணன் நீங்கலாக பாவத்தின் காரணமாக அழிந்து நரகாவஸ்தை அடைந்தார்கள். பீஷ்மர், துரோணர், க்ருபர், கர்ணன் போன்ற ஆசார சீலரும், ஆசாரியர்களும், ஶுத்த ஆத்மாக்களும் துரியோதனாதிகள் பக்கமிருப்பினும், சுவர்கத்தையே அடைந்தார்கள். கேட்டில் பற்றில்லாமல், நிஷ்காமிய கருமம் புரிந்தவர்களைப் புண்ணியமும், பாவமும் சேரா என்பதற்கு இவர்களே எடுத்துக்காட்டாம். அவர்களை அன்னை தன்வயமாக்குகிறாள்.
புண்ணியம் பாவம் புரிந்ததற் கேற்பவன்னை
நண்ணுவள் நன்மை நசிப்பென்று – பண்ணிய
வண்ணம் பயன்களும் வாய்த்தல் மறைமொழிப்
பண்சொலும் வாழ்முறைப் பாங்கு
நண்ணுவள் – செய்வாள்; நசிப்பு-அழிதல்; பண் – ஓசை