322. காமகலாரூபா ( कामकलारूपा – காமகலை வடிவினள் )
காமேஶ்வரனும், காமேஶ்வரியும் ஒன்று சேர்ந்துள்ள வடிவமே காமகலாவாம். எந்திர உருவிலே “ஈ” என்பது சக்தியின் வடிவம்; பிந்துவானது சிவ வடிவம். இரண்டும் சேர்ந்ததே காமகலா எனப்படுவது. அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு புருஷார்த்தங்களில், இன்பமான காமத்தினாலேயே ப்ரபஞ்ச வாழ்வே நடக்கிறது. இச்சைகள் இல்லையென்றால் இயக்கமில்லை, இயங்காததொன்றும் இகத்தில் இல்லை; இச்சைகளை நிறைவேற்றிக்கொள்வதால் ஜீவர்கள் மனப்பரிபக்குவம் அடைந்து இகத்தின் நிலையாமையை உணர்ந்து பரத்தை நோக்கி முன்னேறுகிறார்கள். காமகலா வடிவினளான தேவியே அக்கருவியாக இருக்கிறாள்.
இச்சைகள் இன்றேல் இயக்கங்கள் இல்லையெனும்
விச்சையைக் காமகலா வேதருவாள் – நச்சுதலை
எச்சமின்றி இவ்வுலகில் இன்பமாக்கி ஏற்றிடுவாள்
உச்சத் துயர்த்தும் உமை
விச்சை – அறிவை; நச்சுதல் – விருப்பங்கள்; எச்சம் – மிச்சம், மீதி; உச்சம் – சிறப்பு (பரஸ்திதி)