1000. லலிதாம்பிகாம் ஓம்: ( ललिताम्बिका – அழகிய அன்னையே ஓம்! )
ஆயிரம் நாமங்களில் இறுதியானது. சிறப்புள்ள அன்னை என்று தொடங்கிய நாம வரிசை, அழகிய தாய் என்று நிறைவுறுகிறது. விளையாட்டாகவே ஜகத்தையும், ஜீவகோடிகளையும் படைத்ததோடு, அழகியலோடு அவற்றையெல்லாம் செய்திருக்கிறாள். அவளுடைய ஸாந்நித்தியமே அவள் படைப்பத்தனையிலும் காணப்படுகின்றன, இந்த எளிய முயற்சி உட்பட. பிரணவ ஒலியோடு நிறைவுறும் இந்த நாமாயிர வெண்பா மாலையை உட்பட! அழகியலுக்கே அன்னையாம் லலிதையை வணங்கித் தொழுவோம், ஓம் எனச் சொல்லி!
அழகிய தாயாம் அருளின் வடிவாம்
எழிலாம் லலிதை இறைவி – குழகாம்
பழகுத் தமிழினில் பாவாயி ரத்தால்
தொழவுள் உறைவாள் சுடர்
இன்றோடு இந்த நாம வெண்பா மாலை நிறைவுறுகிறது. என்னம்மையாக, என்னைப் பிறப்பித்து, என்னைக் கைப்பிடித்து நடத்தி, என்னும் அமர்ந்ததும் அவள் தானே. அவளுக்குச் சூடுவது அவளே எனக்குள் ஒளிர்ந்து இட்ட கட்டளையாகத்தான் எண்ணுகிறேன். இப்பணியைச் சரிவரச் செய்தேனா இல்லையா என்றறியேன். ஆனால் குழந்தையின் மழலையும் அன்னைக்கு மட்டற்ற மகிழ்ச்சிதானே!. அன்னையின் அருளாலே அவளை ஆயுள் உள்ளளவும் பாட அவளின் அருளை வேண்டுவதன்றி வேறேதும் வேண்டேன்.
ஓம்