999. ஶிவ ஶக்த்யைக்ய ரூபிணி ( शिवशक्तैक्यरूपिणी – ஶிவனும், ஶக்தியும் ஒன்றான வடிவினள் )
அன்னையை ஶிவ வடிவமென்றோ, ஶக்தி வடிவமென்றோ எண்ணாமல், ஒன்றான வடிவாகவே எண்ணவேண்டும். இதற்கு பல உவமைகளைக் கூறலாம். எள்ளில் உள்ள எண்ணெய் போலவும், சந்திரனில் உள்ள குளிர் கிரணங்கள் போலவும், ஸுர்யனும், வெப்பமும் போலவும், சொல்லும்–பொருளும் போலவும் என்று பலவிதமாக இதை விளக்கலாம். ஶ்ரீ சக்கரத்தில் ஐந்து ஶக்தி சக்கரங்களும், நான்கு ஶிவ சக்கரங்களும் இருந்தாலும் ஶ்ரீசக்கரமாகப் பார்க்கும்போது அந்த பேதம் மறைந்து ஶிவ–ஶக்தி ஐக்கியமாக ஶ்ரீசக்கரம் மட்டுமே புலப்படுகிறது. ஶிவ–ஶக்தி ஐக்கியத்தைக் காட்டும் ஹம்ஸ மந்திரத்தின் வடிவானவளாக உள்ளவள். இன்னும் பலவிதமாக இந்த நாமத்தை விளக்கலாம்.
அத்துவித மாயன்னை ஐயனொடு ஒன்றியவள்
எத்தனைத் தோற்றம் எடுக்கிறாள்? – புத்திக்குள்
சித்திக்கும் ஞானவொளிச் சீராய் சிவனுக்குள்
சத்தியாய் சேர்ந்திருக்கும் தாய்!